Friday, June 10, 2022

‘Seshu Arrived’ - Sanju

Seshu arrived- என் தாத்தா ,அவர் தம்பிக்கு பையன் பிறந்த பொழுது , செய்தி வந்த தந்தியை வைத்துக்கொண்டு அவர் வாழ்ந்து வந்த காலனி முழுவதும் துள்ளி க் குதித்து கொண்டாடினாராம் . பிறகு குழந்தையயை பார்த்து விட்டு வந்த பூரிப்பில் ,தங்கைகள் அனைவருக்கும் குழந்தையை வர்ணித்து கடிதம் எழுதினாராம் . நானும் அண்ணாவின் "Seshu arrived" வாட்ஸப் செய்தியைப் பார்த்து துள்ளிக் குதித்தேன் . என்னிடம் நான் இல்லாமல் போனேன் , என்னை தேடவும் எனக்கு விருப்பம் இல்லை அப்போது . எங்கோ பறந்து கொண்டு இருந்தேன் . நினைவெல்லாம் சேஷு . பெங்களூரிலிருந்து சென்னைக்கு விரைந்தேன் . வழி முழுவதும் சேஷு தான் . எல்லாக் குழந்தை பாடல்களும் கேட்டுத் தள்ளி என்னை தயார் படுத்திக்கொண்டேன் . ( அழகு குட்டி செல்லம் முதல் குரும்பா வரை, ஒரு playlist ஏ இருக்கு). சென்னை வந்தடைந்தேன் . இனிப்புகள் வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் . அப்பாவைப் பார்த்தேன் முதலில் ஒடி வந்து என்னை கட்டி அணைத்துக்கொண்டார், புது தாத்தா . என் பூரிப்பை அந்த அணைப்பு அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும். அறைக்கு அழைத்துச் சென்றார் . உள்ளே புதிதாக பதவி உயர்வு அடைந்தவர்களுக்கு (மந்திரிகளுக்கு) நடுவே , சேஷு அம்மாவின் கதகதப்பில் ராஜ சயனம் செய்து கொண்டு இருந்தான். "Seshu arrived" ஐ படித்தவுடன் "ராஜா வந்துவிட்டார்" என்ற அறிவிப்பு போல் உணர்ந்தது எவ்வளவு உண்மை என்பதற்கு அந்த காட்சியே சாட்சி . அண்ணாவைப் பின்னால் போய் கட்டிக்கொண்டேன் . ராஜாவைக் காணம் தயார் ஆனேன் . ஆப்பிள் போல் இருந்தான் . மன்னி மூக்கு, அண்ணா காது , சிங்கப்பூர் கண்ணு என்று எல்லாவற்றின் பிரதிநிதியாக இருந்தான் (ராஜா ஆயிற்றே) . யார் மாதிரி இருக்கான் என்ற ஆராய்ச்சியின் கேள்வி என்னிடமும் கேட்கப்பட்டது . ஆனால் நானோ பிரமிப்பிலிருந்து வெளியே வரத் தயாராக இல்லை . பிரம்மாண்டம் தான் அவன் . அவன் அழகில் என்னை பிரமிக்க வைத்து வசியம் செய்து கொண்டு இருந்தான் வசியக்காரன் . ஆனந்தக் கண்ணீர் ஒரு பக்கம் நினைக்க , இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் ஆனந்தத்தின் ஆனந்தத்தை . என்னடா அப்படி பார்க்கற என்று எல்லோரும் கண் வைத்தார்கள் . அழகா , செமயா இருக்கான் என்றேன் . மன்னியிடம் சென்றேன், கைக்கொடுத்து சூப்பரா இருக்கான் என்றேன் . மன்னியின் சாந்தமான சிரிப்பு, அவள் கடந்து வந்த வலி "worth it" என்று சொல்வது போல் இருந்தது . அம்மா வச்சுக்கரியானு கேட்டு எடுத்து என் கையில் கொடுத்து அழகு பார்த்தாள் . அம்மா பாட்டியாகத் திகழ்ந்தாள். மென்மையாக இருந்தான் , அவன் ஆரஞ்சுச் சுளை உதடுகளை திறந்து அழகாக கொட்டாவி விட்டான் . அவ்வளவு அழகான கொட்டாவியயை நான் பார்த்ததே இல்லை . கைகள் இரண்டையும் தூக்கிகொண்டு சிணுங்கினான். திராட்சைக் கண்கள் வெளிச்சத்தில் முழுசாகத் திறக்க முடியாமல் , அரை கண்ணில் என்னை பார்த்தான் . " யார் மா அது ? " என்று கேள்வியும் கேட்டு , "சித்தப்பா டா" என்று பதிலும் சொன்னார்கள் . அது தான் பதவி பிரமாணம் போலும் என்று நினைத்துக்கொண்டு சித்தப்பாவாக உயர்ந்தேன் . தனக்கே உரிய அம்மாவின் அணைப்பில் வைக்கப்படான் . கண்ணங்கள் சிவக்க அழுகைக்குத் தயார் ஆனான் . அழுகை தொடர்ந்தது . எல்லாம் "ஏன்டி ஏன்டி" என்று விதவிதமான "ஏன்டி வேணாம்டி" கொஞ்சல்களோடு சமாதான போராட்டத்தில் இறங்கினர். அழுகை கூட ராகமாகத்தான் இருந்தது . மன்னி பாட்டுப் பாடினாள், அந்த சமாதானம் அவனுக்கு புரிந்தது போல் அழுகையை நிறுத்தி ஆச்சரியப்பட வைத்தான் . தாய்மை ஆச்சரியம் தான் . மன்னி சமர்த்தாகவே வளர்ப்பாள் அவனை. அண்ணாவே ஒரு குழந்தை தான் , அவன் சேஷுவை கொஞ்சும் காட்சி இரு குழந்தைகளின் இடையே நடைப்பெறும் சம்பாஷணை தான் . மண்ணியையும் நன்றாக கவனித்து கொண்டு சிறந்த கணவனாகவும் வலம் வந்தான் . பேரன் சூச்சூ போன அழகை புது தாத்தாவும் பாட்டியும் வர்ணிக்க அதில் அவ்வளவு சந்தோஷமா என்று தோன்றிற்று. தாத்தா பாட்டி பதவிக்கே உரிய ரசனை போலும் என்று நினைத்துக்கொண்டேன். என் பாட்டி வந்து பார்த்தாள் , அவள் குழந்தையயை தூக்கிகொண்டு பரம்பரை லாலியை பாடி கொள்ளுப்பாட்டியாக உயர்ந்தாள் . எல்லோருக்கும் உயர்வை தந்து கொண்டாட வைக்கும் சேஷு கண்டிப்பாக உயர்வான் !எல்லோரையும் மகிழ்வித்து கொண்டே உயர்வான். பெங்களூர் திரும்பிக்கொண்டு இருக்கிறேன் , நினைவெல்லாம் சேஷு தான் இப்ப கூட . -சஞ்சு

No comments: